
நீ இல்லாத
அந்தப் பொழுதுகளில்...
வானம்
கருமையைப் பூசிக் கொண்டு
கண்ணீர் விடக் காத்திருக்கும்...
வானவில்லை ஒடித்து
வாசல் ஓரம் போட்டிருக்கும்
காற்று...
மனதோரம்
ஒரு மெல்லிய இழையாய்
ஏக்கம்
சோகப் பாடலை
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
காலண்டர் தாள்கள்
வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும்
தன்னைக் கிழித்துப் போட
கரங்களை எதிர்பார்த்து...
போர்வைக்குள்
தூக்கம் திணறிக் கொண்டிருக்கும்
உன் அணைப்பை எண்ணி..
செல்போன் குறுந்தகவல்கள்
எல்லாமே
குற்றமாய்தான் போகும்
உன் பெயர் இல்லாமல்!
அழைக்கும் குரல்கள்
உன் வாசம் இல்லாமல்
வாடையை முகத்தில் வீசிவிட்டுப்
போகும்!
தொலைக்காட்சிகள்
அலைகளை மாற்றி மாற்றி
வெறுத்துப் போய் ....
கண்களை மூடிக் கொள்ளும்....
நீ இல்லாத பொழுதுகள்..
தாய்வீட்டுக்கு போவதாய்
நீ சொல்லில் செல்லும்
போதெல்லாம்....
நீ இல்லாத பொழுதுகள்
என்னை நானே தொலைத்த
வனாந்திரங்கள்!!!